திங்கள், 27 ஜூலை, 2015

இணையதளங்களினால் நன்மைகளும்,தீமைகளும்.

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். இன்றைய சூழலில் இணையதளங்களினால் மனித சமூகத்திற்கு நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் அதற்கேற்ப ஏற்படுகின்றன.அதைப்பற்றிய விவரங்களை அறிந்துகொள்வோம்.

                   இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணையக் கலாச்சாரம் அதீத வளர்ச்சியடைந்து வருகிறது.வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று இணையம் ஒரு ரூபாய் நாணயத்தைப்போல நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.

வலைதளங்கள்
                  உலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள்  உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுதுபோக்கிறகாக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும்.

சமூக வலைதளங்கள்
                  இணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது. இத்தகைய சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது. பல்வேறு இணையங்களும், சமூக வலைதளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைப்பட்டவையாக அமைந்துள்ளன.


சில சமூக வலைதளங்கள்
                       பல்வேறு சமூக வலைதளங்கள் இருப்பினும் சில குறிப்பிட்ட வலைதளங்களில் மட்டுமே பயனாளிகளின் எண்ணிக்கையும், ஆர்வமும்  அதிகமாக உள்ளன. Facebook, Twitter, Linked in, My space, Ning, Google+, Tagged, Orkut, Hi5, My year book, Youtube, Flicker, Digg போன்ற சமூக வலைதளங்கள் இன்று பெருமளவில் அனைவராலும் அறியப்படுகின்றனவையாக உள்ளன. இவற்றில் முகநூல் எனப்படுகின்ற Facebook மற்றும் Twitter ஆகியவை மிகவும் பிரபலமான வலைதளங்களாகும்.

                         கணினிகளில் மட்டுமன்றி இப்போது ‘ஸ்மாட் போன்’ ?(Smart Phone) என்ற நவீன வசதிகளுடன் கூடிய அலைபேசிகளிலும் இணையத்தின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. கல்லூரி மாணவர்களிடம் இந்த ஸ்மாட் போன்கள் பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. இதற்குக் காரணம் அவற்றில் 24 மணி நேரமும் இருந்த இடத்திலிருந்தே சமூக வலைதளங்கலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துகொண்டு பார்வியிடலாம் என்பதுதான்.
தற்சமயம் ‘வாட்ஸ் அப்’  (Whats App) என்ற வலைதளம் ஸ்மார்ட் போன்களில் பிரபலமடைந்துள்ளது. இதன் வாயிலாக புளுடூத் வசதி இல்லாமலேயே இணையத்தின் வழியாக செய்திகள், புகைப்படங்கள், வீடியோப் பதிவுகள், வாழ்த்துக்கள் என அனைத்தையும் பிறரின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். நவீனத் தொழுல்நுட்பங்கள் கையடக்கத்தில் இருப்பதால் அனைவரின் பார்வையும் ஸ்மாட் போன்கள் மேல் திரும்பியுள்ளன.
இந்த வாட்ஸஅப்பை ரூ.ஒரு லட்சம் கோடிக்கு முகநூல் வாங்கியுள்ளது. ஏதேனும் ஒரு வகையில் மக்களைக் கவர்வதற்காகவே சமூக வலைதளங்கள் முயல்கின்றன. புதிய புதிய சேவைகளை அறிமுகப்படுத்திப் பயனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதே சமூக வலைதளங்களின் நோக்கமாகின்றன.
”வலைதளங்களில் உறுப்பினராக உள்ளவர்களின் எண்ணிக்கை முகநூலில் 80 கோடியும் டிவிட்டரில் 20 கோடி, லிங்க்டு இன் தளத்தில் 13.5 கோடியும், குருப் ஆன் தளத்தில் 11.5 கோடியும், கூகுள் பிளஸில் 9 கோடிபேரும் சீனைவைச் சார்ந்த சமூக வலைதளங்களான ரென்ரென் 17 கோடிபேரும், கியூஜோன் 50 கோடிபேரும், சீனா வைபோ 25 கோடிபேரையும் மற்றுமுள்ள பிற சமூக வலைதளங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிமானோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.”
சமூக மாற்றம்
            மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதையே பெரிதாக கருதும் இன்றையச் சூழலில் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் கேவலமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட், டிவிட்டர், ஆர்குட், யூடியூப் ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை கிண்டலும் கேலியும் செய்யப்படுகின்றனர். இத்தகைய சமூக மாற்றங்கள சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ளன.
பிரபலமான வலைதளங்களில் பெயர்களே கல்லூரி மாணவர்களின் பேச்சினால் இடம் பெறுவதை காணமுடிகின்றது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தைப் பயன்படுத்தும் நிலைமாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலை உருவெடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நன்மைகள்.
               சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் தருகின்றன.கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், உலக மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன.

உறவுகளுக்குப் பாலம்
            தன் குடும்பத்தைப் பிரிந்து சென்ற அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். அதுமட்டுமின்றி நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக் கொள்கின்றனர்.

வணிக வளர்ச்சி.
           வணிக நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாகிறது.

கருத்துப் பரிமாற்றம்
               பலர் வலைதளங்களில் இடும் புதிய பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வலைதளங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவதால் அப்பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும் அவர்கள் அப்பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள்.

தீமைகள்
            சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட  வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஏமாற்று வேலைகள்
             அது மட்டுமின்றி இணையத்தொடர்பில் ஈடுபட்டு சிலர் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்கின்றனர். ஒருவரே பல பெண்களை மணந்து கொள்ளும் ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. சில பெண்கள் சமூக வலைதளங்களால் மன உளைச்சலுக்கு  ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

குற்றங்கள்
        சமூக வலைதளங்களின் உலகளாவிய தொடர்புகளால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் போலீசாருக்கு திண்டாட்டத்தை  ஏற்படுத்துகிறது.

அதிகப்பயன்பாட்டின் விளைவு.
          அலைபேசியில் 24 மணி நேரமும் சமூக வலைதளங்களையே  பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.

                  பெருமளவில் மக்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்.”உலக அளவில் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். முகநூல், டிவிட்டர், மை ஸ்பேஸ் உள்ளிட்ட பத்து சமூக வலைதளங்கள் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுபவை என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் முகநூல்(Facebook) மட்டும் 50 கோடிக்கும் மேலான பயனர்கள் உறுப்பினர்களாக இருந்து பயன்படுத்துகின்றனர். சிறுவர்களும் இளைய சமூகத்தினரும்தான் பெரும்பாலானவர்களாக இருந்து வருகின்றனர்.
           சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது” (tamil. Thehindu.com) என 27-10-2014 அன்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடமைகள் இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் சமுக வலைதளங்களில் மூழ்கி இருப்பது துன்பத்தையே ஏற்படுத்தும்.”பொய்யான முகவரி கொடுத்து நமது சொந்த இரகசியங்களைக் களவாடிக்கொண்டு நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடுவதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது” (http/ponseinilam.blogspot.in) என வலைப்பதிவு செய்தி குறிப்பிடுகின்றது.

               இதுபோல பலவகையான குற்றங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக நடைபெறுகின்றன.
அண்மையில் சமூக வலைதளஙகள் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. தினமலரில் நவம்பர் 21, 2013 அன்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே “பல முன்னேற்றங்கள் கண்டுவரும் இந்நாளில் சமூக வலைதளங்கள் மூலமாக தவறான செயல்கள், நாட்டிற்கு எதிரான குற்றங்கள் பரப்பி விடப்படுகிறது. இதற்கான சுதந்திரம் தவறான வழியில் செல்கிறது. இது கவலை தரும் விஷயம் ஆகும். இவைகளைத் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்” என்றார்.
சமுக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க “லைடிடெக்டர்” என்னும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இது தகவல் தொடர்பு அமைப்புகளின் உதவியுடன் ஆராய்ந்து நாம் தேடும் தகவலுக்கு அருகிலேயே அதன் உண்மைத் தன்மைகளை வெளியிடும். சமீபத்தில் இது சமூக வலைதளங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க இயலும். ஆஹ்டிலும் குறிப்பாகப் பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.


               இன்டர்நெட்டால் நன்மைகள் ஒரு புறம் இருந்தாலும், தீமைகள் பல்கிப் பெருகி, மனித குலத்தை மிரட்டிக்கொண்டு இருக்கின்றன. ஆன்லைன் வாயிலாக கிரடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கிக்கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக இணைய தளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுவது போன்ற சைபர் குற்றங்கள் நடக்கின்றன.
* சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோரில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இன்டர்நெட் மூலம் வர்த்தகம் செய்யும் போது, "ஹேக்கர்ஸ்' (இன்டர்நெட் திருடர்கள்), நமது ரகசிய எண்ணை தெரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் பணம் பறிபோகலாம்.
* தேவையில்லாத இ-மெயில்கள் வரும். அதை "கிளிக்' செய்யும் போது, அது தவறான இணையதளத்துக்கு நம்மை கொண்டு செல்லும். அல்லது கம்ப்யூட்டருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
* இன்டர்நெட்டின் பயன்பாடு காரணமாக, புதிய தொழில்நுட்பங்களை தீவிரவாதிகள் தெரிந்து கொள்கின்றனர். இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிறது.
* இளம் தலைமுறையினர், இன்டர்நெட்டை பயன்படுத்துவது, அக்னி பரீட்சை போல. ஏனெனில், தற்போது "ஆபாச' இணையதளங்கள் பெருகிவிட்டன. இவை இளம் தலைமுறையினரின் மனதை கெடுத்து விடும். சைபர் குற்றங்களுக்கு இதுவும் ஒரு காரணமாகிறது.
* கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பயன்படுத்தும்போது, வைரசால் கம்ப்யூட்டர் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் முக்கியமான தகவல்கள் அழிந்து விடுகின்றன.
* இணையத்தில் சாட் செய்யும் போது, அறிமுகம் இல்லாதவரின் ஆசை வலையில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது.

என்ன செய்ய வேண்டும்:
* இன்டர்நெட்டை பயன்படுத்தும்போது, எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
* முடிந்தளவு சமூக தளங்களில், தனிப்பட்ட விவரங்கள், போட்டோக்கள், வங்கி விவரங்கள், மொபைல் எண்கள், வீட்டு விலாசம் போன்றவற்றை வெளியிடாமல் தவிர்ப்பது நல்லது.
* ஆசை காட்டி வரும் மெயில்களை நம்பி, அந்த இணையதளங்களுக்குள் செல்லாதீர்கள்.
* "பல கோடி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்' என்று கவர்ச்சி காட்டும் மெயில்களில் குறிப்பிடப்படும், இணையதளங்களை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
* பெண்களின் பெயர்களில் செய்யப்படும் "சாட்டிங்', பெரும்பாலும் போலியாக இருக்கும். இதிலும் கவனம் தேவை.
* தொடர்ந்து இன்டர்நெட்டை பார்க்கும்போது, சில நிமிடங்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டரை விட்டு, வேறு பொருட்களை பார்த்தால், கண்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
* தினமும் கண்களை, குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி செய்தால், கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கண் பரிசோதனை செய்யுங்கள். கண்களில் பார்வை கோளாறு இருந்தால், உடனே கண்ணாடி அணியுங்கள். இல்லாவிட்டால், கோளாறு அதிகரிக்கும வாய்ப்பு உள்ளது.