புதன், 25 நவம்பர், 2015

மயங்கொலி சொற்கள்

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்களை அதாவது ர,ற., ல,ள,ழ., ந,ன,ண., எழுத்துக்களின் வேறுபாடுகளை அறிவோம்.

தமிழ் மொழிக்கே சிறப்பாக அமைந்துள்ள சில (ல,ள,ழ, ந,ன,ண,ர,ற) எழுத்துக்களைச் சரியாக உச்சரிப்பதற்கு இது உங்களுக்குத் துணையாக இருக்கும். 

          உச்சரிப்புக்கு முதன்மையாய் உள்ளது வாய். வாயில் பலவேறு பகுதிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை.நா(க்கு),பற்கள்,உதடுகள்அண்ணம்,ஈறு,உள்நாக்கு ஆகியன ஆகும். அண்ணம் என்பது, வாயில் அரைவட்டமாக உள்ள மேல் பகுதி. இந்த அண்ணத்தை மூன்று பகுதிகளாகக் கூறலாம். 
மேல் முன் பற்களுக்கு அருகில் உள்ளது நுனி அண்ணம்; 
அண்ணத்தின் இடைப்பகுதி நடு அண்ணம்; 
நடு அண்ணத்துக்கும் உள் நாக்குக்கும் இடைப்பட்ட அடி அண்ணம். 
முதலில் இவற்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்.


 உச்சரிப்பில் நுணுக்கமான வேறுபாடுகளை உடைய எழுத்துகள் சில உள்ளன. அவ்வெழுத்துகளை மூன்று தொகுதிகளாக இங்கு எடுத்துக் கொள்வோம். அவை;(1) ல, ழ, ள (2)ண, ந, ன(3) ர, ற என்பன.

           முதலில் ல, ள, ழ - இவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
முதலில் "ல" அடுத்து, "ள", அதன் பின்னர் "ழ" என்னும் முறையில் இம்மூன்று எழுத்துகளும் வரும் என்பதை நினைவில் கொண்டால் உச்சரிப்புச் சீராய் வரும்.

             ல, ள, ழ - என்னும் இவ்வெழுத்துகளையும் இவற்றின் இன எழுத்துகளையும் கொண்ட சில சொற்களும் அவற்றின் பொருள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்வது நல்லது.
பலம் - சத்து , வலிமை ( ஒரு பலம் - முன் வழக்கில் இருந்த நிறுத்தல் அளவை )
பழம் - கனி, மூத்தது, முதிர்ந்தது.
வலம் - வலப்பக்கம்,வெற்றி.
வளம் - மிகுதி,அழகு,செல்வம்,செழுமை.
 விலா - வயிற்றின் பக்கப் பகுதி.
விளா - விளாமரம்.
விழா - திருவிழா.
வலி - நோய்,வல்லமை,இழு(த்தல்).
வளி - காற்று.
வழி - பாதை,இடம்,காரணம், மிகுந்து வடி(தல்).
விலை - பொருளின் மதிப்பு.
விளை - உண்டாக்கு, ஏற்படு.
விழை - விரும்பு,வேண்டு,பழகு.
கொழு - கொழுத்தல், கொழுப்பு.
கொளு - கருத்து,பொருத்தும் கருவி.
கொலு - கொலு வைத்தல், கொலு வீற்றிருத்தல்.
வால் - விலங்குகளின் வால், தொங்கும் உறுப்பு.
வாள் - வெட்டும்/அறுக்கும் கருவி, அரிவாள்.
வாழ் - பிழைத்திரு,உயிர்வாழ்.
இவ்வாறு பல சொற்கள் உள்ளன. அவற்றின் எழுத்துகளும் உச்சரிப்புகளும் மாறுபடுவதால் பொருள்களும் மாறுபடுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
        இப்படிப் பொருள் வேறுபடும் சில வாக்கியங்களையும் காண்போம்.(உதாரணம்)
தவலை கிணற்றில் விழுந்தது.
தவளை கிணற்றில் விழுந்தது.
முதல் வரியில்  " தவலை " - அதாவது தண்ணீர்க்குடம் கிணற்றில் விழுந்தது என்றும், அடுத்தவரியில்  " தவளை " - நீர்வாழ் உயிரினம் ஒன்று நீரில் குதித்தது என்றும் பொருள்படும்.
தலையை வெட்டினான்.
தழையை வெட்டினான்.இவற்ற்றில் முன்னது உடல் உறுப்பாகிய " தலையை " வெட்டினான் என்னும் பொருளையும், பின்னது " தழையை " - அதாவது தாவரங்களின் இலையை வெட்டினான் என்னும் பொருளையும் உணர்த்தும். உச்சரிப்புத் தவறானால் பொருளே வேறுவிதமாய்ப் போய்விடுகிறதல்லவா ? இப்படிப் பல எடுத்துக் காட்டுகளைச் சொல்லலாம்.
ல, ள, ழ - இம்மூன்று எழுத்துகளின் முறையான உச்சரிப்பையும், அவ்வெழுத்துகளாலாகும் சொற்களைத் தவறாக உச்சரிப்பதால்பொருள் மாற்றம் ஏற்படும் என்பதை உணருங்கள்.

 தொல்காப்பியம் .
 எழுத்ததிகாரம் (பிறப்பியல்)உந்தி முதலா முந்து வளி தோன்றிதலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇபல்லும் இதழும் நாவும் மூக்கும்அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடிஎல்லா எழுத்தும் சொல்லும் காலைபிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயலதிறப்படத் தெரியும் காட்சியான. 
1அவ் வழி,பன்னீர் உயிரும் தம் நிலை திரியாமிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும். 
2அவற்றுள்,அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்.
 3இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்அப் பால் ஐந்தும் அவற்று ஓரன்னஅவைதாம்,அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய.
 4உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்அப் பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும். 5தம்தம் திரிபே சிறிய என்ப. 
6ககார ஙகாரம் முதல் நா அண்ணம். 
7சகார ஞகாரம் இடை நா அண்ணம். 
 8டகார ணகாரம் நுனி நா அண்ணம்.
 9அவ் ஆறு எழுத்தும் மூ வகைப் பிறப்பின. 
 10அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்நா நுனி பரந்து மெய் உற ஒற்றதாம் இனிது பிறக்கும் தகார நகாரம். 
11அணரி நுனி நா அண்ணம் ஒற்றறஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12நுனி நா அணரி அண்ணம் வருடரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.
 13நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உறஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 
14இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம்.
 15பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும். 
16அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசைகண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும். 
17மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்மூக்கின் வளி இசை யாப்புறத் தோன்றும்.
 18சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத்தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணிஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும்.
 19எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்துசொல்லிய பள்ளி எழுதரு வளியின்பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்துஅகத்து எழு வளி இசை அரில் தப நாடிஅளபின் கோடல் அந்தணர் மறைத்தே.
 20அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக