செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

முதலாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி- சத்தியமங்கலம்.-2014

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். தயவுசெய்து இந்தப்பதிவினை முழுமையாகப் படியுங்க...சத்தியமங்கலம் புத்தகக் கண்காட்சி 15-10-2014 இல் நடத்த தயாராகுங்க....

     ( முன்னதாக) தங்கள் மேலான கவனத்திற்கு - ஈரோடு  புத்தகத் திருவிழா பற்றிய ஒரு கண்ணோட்டம்.
        '' மக்கள் சிந்தனைப்பேரவை'' அமைப்பிற்கு நன்றிங்க. அனைவரின் கவனத்திற்கு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டார அனைத்து மக்களும் புத்தக வாசிப்புத்திறனை பெற வேண்டும்.என்ற எண்ணத்தில் சத்தியமங்கலத்திலும் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான பணிகளை புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்...தங்களது ஆதரவை கொடுத்து உதவ வேண்டுகிறோம்.ஆதரவு என்பது புத்தக அரங்கு அமைக்க ,படைப்பாளர் மேடை அமைக்க,மிக முக்கிய பிரமுகர்களை அழைத்து கருத்தாக்கம் வழங்கிட,ஒலிபெருக்கி வசதி அமைத்திட,மின் வசதி கொடுத்திட,ஒளி மின் விளக்குகள் அமைத்திட,அழைக்கும் சான்றோர் மேன்மக்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்திட,என்ற பயனுள்ள வகையில் ஆதரவு கொடுத்த உதவினால் நன்று....
           
             

ஈரோடு புத்தகத் திருவிழா-2014
மேலோட்டமான செய்தித் தொகுப்பு

மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் பத்தாம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா, கடந்த ஆகஸட் 1 முதல் 12 வரை மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
எல்லாக் கோணங்களிலும் தரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மாநில அளவிலான புத்தகத் திருவிழாவாக இது பரிணமித்தது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவெங்குமிருந்து மிக முக்கியமான புத்தக நிறுவனங்கள் வந்து அரங்குகள் அமைத்திருந்தன.
இந்தியாவில் நடைபெறும் பெரிய பெரிய புத்தகக் கண்காட்சிகளில் கூட இதுவரை அரங்கு அமைக்காத சில வெளிநாட்டு புத்தக நிறுவனங்களும் ஈரோடு புத்தகத்திருவிழாவில் அரங்குகள் அமைத்திருந்தன.
சமூக முன்னேற்றத்திற்குத் தேவையான நல்ல நூல்கள் உலகின் எந்த மூலையில் இருப்பினும் அது ஈரோடு புத்தகத்திருவிழாவில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மக்கள்சிந்தனைப் பேரவை எடுத்த தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே அதைக் கொள்ளலாம்.

‘தமிழவேள் கோ.சாரங்கபாணி நினைவு உலகத்தமிழர் படைப்பரங்கம்’ என்கிற பெயரில் ஒரு சிறப்பு அரங்கம் நிர்மாணிக்கப்பட்டு, அதில் - இந்தியாவைத் தாண்டி, உலகெங்குமுள்ள தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகள் மட்டும் இடம் பெற்றன. பல்லாயிரம் தலைப்புகளில் நூல்கள் இங்கே பார்வைக்கும் விற்பனையில் வைக்கப்பட்டு, பார்ப்போரைப் பரவசப்படுத்தின.
மேலும் இந்தச் சிறப்பு அரங்கில் வெளிநாட்டு தமிழ்ப்படைப்பாளிகளின் படங்களும் அவர்களைப்பற்றிய குறிப்புகளுடன் இடம் பெற்றிருந்தன. இது பார்வையாளர்களுக்கு நெஞ்சைக் கவர்ந்த அம்சமாக இருந்தது.

'படைப்பாளர் மேடை' என்கிற சிறப்பு எற்பாடு ஒன்று ஒவ்வொரு நாளும் உயிரோட்டமாக நடைபெற்றது. படைப்பாளருடன் வாசகர்கள் நேரடியாகக் கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்வதற்கான அற்புதத் தளமாக இந்த ‘படைப்பாளர் மேடை’ திகழ்ந்தது. சுகி.சிவம், கவிக்கோ அப்துல்ரகுமான், ஈரோடு தமிழன்பன், கவிஞர் புவியரசு, கவிஞர் பெ.சிதபம்பரநாதன், கவிஞர் கே.ஜீவபாரதி உள்ளிட்ட புகழ்பூந்த படைப்பாளிகள் வாசகர்களை இப்படைப்பாளர் மேடையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
மொத்தம் 230 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 12 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தகத்திருவிழாவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 7 கோடி ரூபாய்க்கும் மேலாக புத்தகங்கள் விற்பனையாகின.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி இசைஞானி இளையராஜா இந்த புத்தகத்திருவிழாவைத் தொடங்கி வைக்க புத்தகத்திருவிழாவின் சிந்தனை அரங்க மேடையில், சுகி.சிவம், நெல்லை கண்ணன், கு.ஞானசம்பந்தன், கபிலன் வைரமுத்து, மரபின் மைந்தன் ம.முத்தையா, இளம்பிறை மணிமாறன், நடிகர் சிவகுமார், இலங்கை ஜெயராஜ் ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர். கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கமும், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றமும், புற்பவனம் குப்புசாமி, அனிதாகுப்புசாமி தம்பதியரின் இசைநிகழ்ச்சியும் மிகச்சிறப்பாக மக்கள் வரவேற்பைப் பெற்றன.
தினசரி மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுகளில் சுமார் 10,000 பேர் பார்வையாளர்களாக அமர்ந்திருந்த காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தொடக்க விழா, நிறைவு விழா மற்றும் இடையில் சில சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பல்லாயிரம் பேர் பார்வையாளர்களாக விளங்கினர். இந்நிகழ்ச்சிகளில் மிகுந்த எழுச்சி காணப்பட்டது.
நிறைவு விழா நிகழ்ச்சிக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் வருகை புரிந்து நிறைவு விழாச் சிறப்புப் பேருரை நிகழ்த்தினார். ஈரோடு புத்தகத்திருவிழா நிகழ்ச்சிக்கு, இது அவரது இரண்டாவது வருகை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
விழா மேடையில் அமர்ந்திருந்த அவருக்கும், கீழே அலைஅலையாய் திரண்டு அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்களுக்கும் இடையே ஊடாடிய நெகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

ஊக்கமும் எழுச்சியும் ஊட்டத்தக்க வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக அவரது உரை அமைந்தது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வே.க.சண்முகம் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி மற்றும் அக்னி ஸ்டீல்ஸ்; நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் மற்றொரு இயக்குனர் எம்.சின்னசாமி வாழ்த்துரை வழங்கினார். மக்கள் சிந்தனைப் பேரவையின் சென்னை மாவட்டச் செயலாளர் ந.அன்பரசு நன்றியுரைத்தார்.
இந்தியாவெங்கும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவ-மாணவியர் கலந்து கொண்டு பயன்பட்ட புத்தகத் திருவிழா இதுவாகத் தான் இருக்க முடியும்.
ஈரோடு புத்தகத் திருவிழா தேசியத் தரத்துடன் விளங்கிய மாநிலத்தழுவிய புத்தகத் திருவிழாவாகத் திகழ்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக