புதன், 14 டிசம்பர், 2011

'போன்சாய்' முறை

                'போன்சாய்' முறை

''பெரிய அளவிலான மரங்களைக் குட்டையாக வளர்க்கும் 'போன்சாய்' முறைக்கு எங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது?''
- ஆர். கவிதா, சென்னை.
இவருக்கு நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர்.எம். வேல்முருகன் பதில் சொல்கிறார்.
''பெரிய மரங்களை அழகு ரசனையுடன் சின்னஞ் சிறியச் செடிகளாக மாற்றும் தொழில்நுட்பம்தான் போன்சாய். சீனாவில் இருந்து ஜப்பான் நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து உலகம் முழுக்க இந்த முறை பரவியது. ஜப்பானிய மொழியில் 'போன்' என்றால் ஆழமில்லாதத் தட்டு, 'சாய்' என்றால் செடி என்று அர்த்தம். அடர்ந்தக் காடுகளில் கிளை பரப்பி வளர்ந்து நிற்கும் மரங்களைக் குட்டை, குட்டைச் செடிகளாக மாற்றிவிடலாம். மரங்களை இப்படி மாற்றினாலும், அவற்றுக்கு முறையாக ஊட்டச்சத்தும், நீரும் கொடுக்க வேண்டும். ஆக, பெரிய மரங்களுக்கு நாம் எப்படி பராமரிப்பு செய்கிறோமோ அதை போலவே இதற்கும் செய்ய வேண்டும். மரங்களின் கிளைகளையும், வேர்களையும் கவாத்து செய்வதால், குட்டைச் செடிகளாகவே அவை இருக்கும்.
மா, கொய்யா... போன்ற பழ மரங்களையும் போன்சாய் முறையில் வளர்க்க முடியும். அவை பருவத்தில் காய் காய்க்கும். பெரிய மரங்களைக் காட்டிலும் விளைச்சல் குறைவாக இருந்தாலும், சுவை அருமையாக இருக்கும்.
போன்சாய் மரம் வளர்ப்பு என்பது பொழுதுபோக்குடன் கூடிய தொழிலாகும். ஒரு போன்சாய் செடியை உருவாக்கக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ஆகும். நன்றாகத் திட்டமிட்டு செய்தால் ஒரு போன்சாய் செடியை ஆயிரக்கணக்கில் விற்பனை செய்ய முடியும். இதற்கு எங்கள் மையத்தில் பயிற்சி வழங்குகிறோம். விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், நகர்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், புதிய எண்: பி-44, 6-வது அவென்யூ (கே-4, காவல் நிலையம் பின்புறம்) அண்ணாநகர், சென்னை-600040. தொலைபேசி: 044-26263484.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக